சென்னை:
விவசாயிகளை கேவலமாக பேசி வீடியோ வெளியிட்ட  மாரிதாஸ் மீது காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு பதிவு செய்துள்ளது. விவசாயிகளையும், விவசாயத்தையும் இழிவுபடுத்திய மாரிதாஸை கைது செய்யவேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில், விவசாயிகள் குறித்து மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், விவசாயிகள் நிலங்களை கற்ப்பழிக்கிறார்கள், இலவச மின்சாரத்தை பயன் படுத்தி நிலத்தடி நீரை பாழடிக்கிறார்கள். மின்சாரத்திற்கும், தண்ணீருக்கும் கட்டணம் விதிக்க வேண்டும், மாற்று தொழில்களை விவசாயிகள் என்ற போர்வையில் எதிர்க்கிறார்கள். பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் என பல குற்றச்சாட்டுக்களை வீசியிருந்தார்.
இதற்கு ஏற்கனவே விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின்  சார்பாக கடலூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து,   காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.இளங்கீரன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளரிடம் அளித்த புகார் கடித்தில், “யூ-ட்யூப் சேனல் நடத்தும் மாரிதாஸ் என்பவர் சமூக வலைதளத்தில் விவசாயிகளை கேவலமாகவும், அசிங்கமாகவும், விவசாயத்தை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார்.
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலாவணிக்கு வழிவகுக்கும் அரிசி ஏற்றமதியையும் அவதூறாகப் பேசியுள்ளார். பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை நிறுத்தச் சொல்வதும், தண்ணீருக்கு மீட்டர் பொருத்தச் சொல்வதும் விவசாயத்தை அழிக்கும் இவர் கூறும் அபத்தமான சிந்தனையாகும்.
உழன்றும், உழவே தலை என்ற பண்டைய மரபு தொழிலான விவசாயத்தையும், விவசாயிகளையும் “ஏமாற்றுத் தொழில்” என்றும் மானியம் வாங்குவதற்காக செய்கிறார்கள் என்றும் கேவலப்படுத்தி யுள்ளார். உலக மக்களின் பசிதீர்க்கும் வள்ளலாக இருக்கும் விவசாயிகளை இழிவுபடுத்தும் மாரிதாஸை கைது செய்து அவர் வெளியிட்ட விவசாயிகளுக்கு எதிரான வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கூறி உள்ளார்.
மேலும்,  விவசாயிகளை கேவலமாகவும் அவதூறாக பேசிய மாரிதாஸ் முகநூல் பதிவை நீக்க வேண்டும் விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் விவசாயிகள் அனைவரும் இவர் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.