சென்னை:

த்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கக்கூடாது, பாகுபாடு காட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“ இந்தியாவில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், செயல்களும் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன. தமிழகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மட்டும் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்வதும், பாராமுகம் காட்டுவதுமே இதற்கு காரணமாகும்.

தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது வரலாறு காணாத வறட்சி காரணமாக உழவர்கள் அனுபவிக்கும் வேதனையும், துயரங்களும் ஆகும். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாசனப்பரப்பில் 87% வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளின் மொத்த மதிப்பு ரூ.40,000 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தால், வெறும் 1748 கோடியை மட்டும் மத்திய அரசு நிதி உதவியாக வழங்குகிறது. தமிழக அரசையும், மக்களையும், கடவுளுக்கு நிகரான விவசாயப் பெருமக்களையும் இதைவிட மோசமாக அவமானப்படுத்த முடியுமா? என்பது எனக்குத் தெரியவில்லை.

உழவர்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி தான் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக உழவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் அவர்களின் கோரிக்கைகளை மத்திய ஆட்சியாளர்கள் இதுவரை காது கொடுத்துக் கேட்க மறுக்கின்றனர். பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களில் இருந்து கைக்கெட்டும் தொலைவில் தான் இவர்களின் போராட்டக்களம் இருக்கிறது என்றாலும் கூட இவர்களை சந்திக்க மறுக்கும் அளவுக்கு தமிழக உழவர்களை தீண்டத்தகாதவர்களாக மத்திய அரசு பார்க்கிறது. சோறு படைக்கும் உழவர்களை அரசு இவ்வாறு அவமதிப்பது நியாயமல்ல.

அதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் காரணம் காட்டி, அத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை சற்றும் மதிக்காமல் அதற்கான ஒப்பந்தத்தை கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு நேற்று செய்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நெடுவாசலில் அந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மக்களின் ஒப்புதலுடன் தான் இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலையாகும். நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் 22 நாட்களுக்கு  அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியை ஏற்று நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக  கைவிட்டிருந்தனர்.

நெடுவாசல் மக்களை தில்லிக்கு அழைத்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘மக்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகு தான் இத்திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். மக்கள் விரும்பவில்லை என்றால் கைவிடப்படும்’’ என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அதைமீறி இப்போது இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகமாகும். கூடங்குளம் அணுமின் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் எப்படி மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றினவோ, அதேபோல் தான் இந்த விஷயத்திலும் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றியுள்ளன. மக்கள் விரும்பாத திட்டத்தை அவர்கள் மீது திணிப்பது மோசடியாகும்.

மீனவர்கள் பிரச்சினையிலும் மத்திய அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6&ஆம் தேதி சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு நடத்திய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக மீனவர்களை இனி சிங்களப்படையினர் தாக்க மாட்டார்கள்; கைது செய்யமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்பின் கடந்த 21&ஆம் தேதி மீனவர்களுடன் தில்லியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இதே வாக்குறுதியை அளித்திருந்தார். ஆனால், பிரிட்ஜோ படுகொலைக்குப் பிறகு இதுவரை 3 முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர்; 38 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த விஷயத்திலும் மீனவர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சார்ந்த விஷயங்களில் மட்டும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது  ஏன்?  தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களும், உழவர்களும், பொதுமக்களும் இந்தியாவின் குடிமக்கள் அல்லவா? என்பது தான் மத்திய அரசிடமிருந்து விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஆகும். இப்பிரச்சினைகளில் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மாநில அரசும் குரல் கொடுக்க  மறுக்கிறது. இது மிகப்பெரிய துரோகமாகும். இந்த போக்கை கைவிட்டு, தமிழக விவசாயிகள், மீனவர்கள், நெடுவாசல் மக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”  இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.