உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளுக்கு நீங்கள் அணியும் செருப்பும் காரணமா?
நாம் அணியும் செருப்பிற்கும், ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்? என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். நாம் அணியும் செருப்பு, ஷூ, கூலிங்கிளாஸ் முதற்கொண்டு அனைத்தும் சனி பகவானுடைய காரகத்துவம் கொண்ட அம்சங்களாகும். எனவே இவற்றை நாம் தேர்ந்தெடுக்கும் முறைகளும், பயன்படுத்தும் முறைகளும் கூட நம்முடைய தடைகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது என்கிறது ஜோதிடம். அப்படி நாம் அணியும் செருப்பு எந்த வகையில் நமக்குத் தடையாக இருக்கும்? என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஒருவருடைய செருப்பு சரியான அளவில் இல்லாமல் இருந்தால்! நிச்சயமாக, அவர்களுடைய வருமானம் தடைபடும். நீங்கள் அணியும் செருப்பு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உங்களுடைய சரியான அளவிற்கு இல்லாமல் தவறாக அமைந்து விட்டால் அதனை நீங்கள் பயன்படுத்தவே கூடாது. வாங்கி விட்டோம் என்பதற்காக அந்த செருப்பைப் பயன்படுத்தினால் வருமான ரீதியான தடை ஏற்படும் என்கிறது ஜோதிடம்.
நீங்கள் அணியும் ஷூ, சாக்ஸ் போன்றவை கூட தொழில் தடையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் கிடைக்க இருக்கும் பதவி உயர்வு போன்றவற்றைத் தடுத்து நிறுத்தும். நீங்கள் அணியும் சாக்ஸ் முழங்கால் வரை இருப்பது துரதிர்ஷ்டத்தைச் சேர்க்கும். அது போல் சாக்ஸ் கிழிந்து இருந்தாலோ அல்லது சிறிய ஓட்டை இருந்தாலும் முன்னேற்றம் என்பது இருக்காது. செருப்பு, ஷூ போன்றவை உங்களுக்கு அணியும் பொழுது கச்சிதமாக இல்லாமல் இருந்தால் எதிலும் முன்னேற்றம் என்பது இருக்காது. தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் உள்ளவர்களுக்குத் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் அணியும் செருப்பு, பிய்ந்த செருப்பு அல்லது அழுக்குடன் இருக்கும் செருப்பாக அணிந்தால் வெற்றியில் நிறையத் தடைகளும் ஏற்படும். இதனால் தோல்விகள் தொடர்ந்து வரும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் ஏதாவது ஒரு தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டே இருக்கும். அணியும் செருப்பு, அது சரியாகவும், தூய்மையாக இருப்பது அவசியம் ஆகும் என்கிறது ஜோதிடம்.
பெண் பார்க்கச் செல்லும் பொழுது அந்த பெண்ணுக்கு உங்களை உடனே பிடித்துப் போக நீங்கள் அணியும் செருப்பு கூட ஒரு காரணமாக இருக்குமாம். அதனால் தான் புதிய செருப்பு அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். பெண் பார்க்கச் செல்லும் பொழுது உங்களுக்குப் பொருத்தமான புது செருப்பை அணிந்து தான் பாருங்கள். நீங்கள் பார்க்க இருக்கும் பெண்ணிற்குச் சட்டென உங்களைப் பிடித்துப் போகும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? மணமகளுக்கு புது செருப்பு வாங்கிக் கொடுப்பது கூட இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான்.
மணம் முடிந்த பிறகு, புது மணப்பெண்ணிற்கு எல்லாவற்றையும் புது பொருட்களாக வாங்கித் தரும் பொழுது கூடவே சேர்த்துச் செருப்பையும் புதுசாக வாங்கி தருவார்கள். இதனைக் கவனித்தது உண்டா? மணமகளுக்கு இருக்கும் தோஷங்கள் நீங்கவும் ஒரு மனையில் இருந்து இன்னொரு மனைக்குச் செல்ல இருக்கும் மணமகளுக்குச் சனி பகவானுடைய பார்வையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் விலை உயர்ந்த புது செருப்பு வாங்கிக் கொடுக்கப்படுகிறது.
இதைப்பல சம்பிரதாயங்களைப் பின்பற்றும் பொழுது பெரும்பாலும் மணமகன் வீட்டார் மணப்பெண்ணிற்குச் செய்வது வழக்கம். கோவிலில் செருப்பு தொலைந்தால் மிகவும் நல்லது தான். நம் கர்மாக்கள் தொலைந்தது என்று நினைத்துக் கொள்ளலாம். செருப்பு, ஷூ, சாக்ஸ் மட்டுமல்ல நாம் அணியும் கூலிங்கிளாஸ் கூட சனி பகவானுடைய காரகத்துவம் பெற்றவையாகும். எனவே அதனை விலை மலிவாக வாங்கி அணியாமல் உங்கள் தகுதிக்கு ஏற்ப விலை உயர்ந்தவற்றை வாங்கி அணிவது யோகம் தரும்.