சென்னை:
ங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களை வரிசைப்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்டமாக சில பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் முதல்வர் ஸ்டாலினால் இன்று வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:

“முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, மே 9 அன்று அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 இலட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை (TNeGA) மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (SMS) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.

இதுவரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பத்து (10) பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதல்வர் நலத் திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராணிக்கு முதியோர் உதவித் தொகையும், பரங்கிமலையைச் சார்ந்த நித்யா என்பவருக்கு, விதவை உதவித் தொகையும், தியாகராயநகரைச் சேர்ந்த சத்தியநாராயணன் என்பவருக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகையும், சூளைமேட்டைச் சேர்ந்த தாயாரம்மா என்பவருக்கு முதிர் கன்னி உதவித் தொகையும், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு தையல் இயந்திரமும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு வாரிசு சான்றிதழும், ஆயிரம் விளக்கைச் சேர்ந்த நந்தினிக்கு காதுகேட்கும் கருவியும், ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டபாளையத்தைச் ஜெயந்தி என்பவருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும், ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு ஊராட்சியைத் சார்ந்த முத்துராமன் என்பவருக்கு வீடு கட்ட உதவியும், ராணிப்பேட்டை மாவட்டம், சிறுவாளைத்தைச் சார்ந்த சுபாஷ் என்ப்வருக்கு சொட்டுநீர் பாசன உதவி ஆகிய நலத் திட்டங்கள் முதல்வர் ஸ்டாலினால் இன்று வழங்கப்பட்டன.

சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் முதற்கட்டமாக பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற நான்கு மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் ஆணையை முதல்வர் மூலம் சம்பந்தப்பட்ட பின்வரும் துறைகளுக்கு வழங்கப்பட்டது.