கோவில்பட்டி,

பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் வெறுப்புடன் உள்ளனர் என்று  வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ள திமுக. மாவட்டம் தோறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. கோவில்பட்டியில் நடைபெற்ற முகவர்கள் கூட்டம் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி பாஜக கடுமையாக தாக்கி பேசினார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி எப்போது ஒழியும் என்றும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளதாக கூறியவர், நாட்டு மக்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக அளித்த எந்தவொரு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியவர், அதன் காரணமாக பாஜ அரசின் மீதும் மக்கள் கோபத்தில் உள்ளனர்.

அதனால்தான்,  தமிழகத்துக்கு  மோடி வரும்போதெல்லாம், அவரை திரும்பி போங்கள் என்று தைரியமாக கூறுகின்ற அளவுக்கு  மக்கள் வெறுப்பில் இருக்கிறார்க. அதுபோலன்ற நிலைமை தான் தற்போது அதிமுகவுக்கும் ஏற்பட்டு உள்ளது. இந்த இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு ரூ.2 ஆயிரம் தருவதாக ஏமாற்றுகிறது. சரக்கு, சேவை வரி விதிப்பால் தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தி தொழிலுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் அந்த தொழில்களை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

குடிசை தொழிலாக செய்து வந்த தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தி போன்ற தொழில்களை பெரிய நிறுவனங்கள்தான் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். படித்த இளைஞர்களுக்கும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு துரோகம் விளைவிக்கின்ற பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியை நாட்டை விட்டு விரட்டுங்கள். அப்போதுதான் நமது நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.