சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில், வாக்கு எண்ணிக்கைக்கு தடை உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றமும், வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவிட உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், “நீதி மன்றத் தீர்ப்பும், மக்கள் மன்றத் தீர்ப்பும்!” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

“தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாம் நீங்களும், தோழமைக் கட்சியின் தொண்டர்களும் ஓய்வறியாமல் – ஒருங்கிணைந்துப் பணியாற்றிய களங்கள் யாவும் நமக்கான வெற்றி முத்திரையை வாக்குப்பெட்டிக்குள் நிரம்பிடச் செய்திருக்கின்றன.

நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இரட்டை நிலைப்பாடு அம்பலமானது. அது தன்னிச்சையாக செயல்படுகிறதா, ஆள்வோரின் கைப்பாவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுந்தரப்பின் அத்துமீறல், முறைகேடுகளைத் தடுத்திட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றி அழித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் காதுகளைத் திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்பிறகும்கூட, முழுமையாகத் தேர்தலை நடத்தி மக்களைச் சந்திக்கும் துணிவின்றி, ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல், அதுவும் இரண்டுகட்டமாக வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என ஒட்டுமொத்த நிர்வாகத்தையே பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டு, அனைத்துவிதமான முறைகேடுகளையும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் செய்த நிலையில், மக்களின் பேராதரவு தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இருப்பதால், தேர்தல் களத்தை நாம் தெம்பாகவே எதிர்கொண்டோம். தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாம் நீங்களும், தோழமைக் கட்சியின் தொண்டர்களும் ஓய்வறியாமல்-ஒருங்கிணைந்து பணியாற்றிய களங்கள் யாவும் நமக்கான வெற்றி முத்திரையை வாக்குப்பெட்டிக்குள் நிரம்பிடச் செய்திருக்கின்றன.

விளைந்திருக்கும் பயிரை கவனமாக அறுவடை செய்திட வேண்டும். ஒரு நெல்மணிகூட வீணாகிவிடக்கூடாது, ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கடந்த மடலிலேயே நினைவுபடுத்தியிருந்தேன். அதற்கேற்ப கழகத்தின் சட்டத்துறையும் செயலாற்றியது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆளுந்தரப்பின் முறைகேடுகளை முறியடிக்கவும், வாக்குப்பதிவின் போது அவர்கள் நடத்தவிருக்கும் தில்லுமுல்லுகளைத் தடுத்திடவும் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளையும் அதனை முறையாகப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. “ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வாக்குகள் ஒரே பெட்டியில் போடப்பட்டிருப்பதால், அவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும் என்பதால் அதில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுத்திட வேண்டும்” என்பதே அந்த மனுவின் முக்கிய அம்சமாகும்.

அதனடிப்படையில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் 1995ல் உள்ள விதிகள் 60 முதல் 69 வரையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் முழுவதும் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். சி.சி.டி.வி. கேமரா மூலம் அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பெட்டிகளை, வாக்குகள் எண்ணும்வரை உரிய பாதுகாப்புடன் வைத்திட வேண்டும். வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தில் வேட்பாளர் அல்லது முகவர் அனுமதிக்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த வழக்கு 2019 டிசம்பர் 30 அன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்திபன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.

இளங்கோ ஆஜராகி வாதாடினார்.  2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்களில் நடந்த முறைகேடுகளையும் அண்மையில் அ.தி.மு.க. ஆட்சி நடத்திய கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் நடந்த வரைமுறையற்ற விதிமீறல்களையும் சுட்டிக்காட்டி வாதங்களை வைத்தார்.

அதுமட்டுமின்றி, முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த மையத்திற்குள் அத்துமீறல்கள் நடந்ததால், வாக்குப்பெட்டிகளில் இருந்த சீல் அகற்றப்பட்டும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவரக்குறிப்புகள் சிதறிக் கிடந்ததையும், இதுகுறித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததன் விளைவாக தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் பிறபகுதிகளிலும் இத்தகைய விதிமீறல்கள் நடைபெறாதபடி, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்திட உத்தரவிட வேண்டும் என்றும் கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

தி.மு.க.வினரைத் தாக்கும்படி ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவரே பிரச்சாரம் செய்ததையும், முதல் கட்ட வாக்குப்பதிவில் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி, கழகம் தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திட உத்தரவிடவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

கழகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை, சட்டத்திற்குட்பட்டவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வாக்கு எண்ணிக்கையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான சீட்டுகளை கேமராவில் பதிவு செய்ய மறுப்பதையும் கழக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியபோது, அதில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இறுதியாக, கழகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கினை முடித்து வைத்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளின் எதிர்பார்ப்பாகும். இதனை தி.மு.க. மட்டும் வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.