மும்பை:

றைந்த ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக  செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில், இந்திய தேசிய கொடி போர்த்தி மும்பை போலீசார் மரியாதை செலுத்தினர். அப்போது மும்பை போலீசாரின் பேண்டு வாத்திய குழு இசைத்தது.

அதைத்தொடர்ந்து அவரது உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

பிற்பகல் 2 மணி அளவில்  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்ட அவரது உடல், அவரது வீடு உள்ள பகுதியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள   வில்லேபர்லா மயானத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பபட்டது.

அதைத்தொடர்ந்து சுமார் 4.40  மணி அளவில் அவரது உடல் மயானத்தை வந்தடைந்தது.

அங்கு நடைபெற்ற கடைசி நேர  இறுதிச் சடங்கு நடப்பதற்கு முன்பு  பிரபல நட்சத்திரங்களான நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான் உள்பட பலர்  மீண்டும் அஞ்சலி செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து மாலை சுமார் 5,20 மணி அளவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடல் ஊர்வலம் செல்லும் பாதையின் இரு புறங்களிலும், ஏராளமானோர்  கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரது உடல்  மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் பிறந்த இந்த மயிலு….லட்சக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருடன்  மும்பையில் தனது இறுதி யாத்திரையை முடித்துள்ளது….