தாயம் படம் அறிமுகமான தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர், கண்ணன் ரங்கசாமி (29) இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

தாயம் படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. ரங்கசாமியின் முதல்படம் மற்றுமல்லாமல் இந்தியாவிலேயே ஒரே அறையில் வைத்து உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ‘தாயம்’ படம் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பு காரணமாக  இன்று காலை காலமானார். ஏற்கனவே  கடந்த மாதம் ஒருமுறை அவருக்கு  மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் கோமாவில் இருந்து, கிட்டத்தட்ட 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அவர், இன்று காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இளம் வயதில் கண்ணன் ரங்கசாமி மாரடைப்பு காரணமாக  காலமானது கோலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாரடைப்பை கண்டுகொள்வது எப்படி?

நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என பலர் நினைத்து அலட்சியப்படுத்தி விடு கிறார்கள். ஒருசிலரோ லேசான வலி வந்தாலே அது நெஞ்சுவலி, மாரடைப்பு என பயந்து அதற்கான சிகிச்சைக்கு செல்கிறார்கள்.

ஆனால், பொதுவாக நெஞ்சில் வலி என்றால் உடனே அதை அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனை மேற்கொண்டு,  பதட்டப்படாமல் அதற்கான சிகிச்சை மேற்கொண்டாலே போதுமானது.

நெஞ்சுவலி எதனால் ஏற்படுகிறது?

ஒருவருக்கு  நெஞ்சு வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை.

1) ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி.

2) மாரடைப்பு.  இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படு கிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும்.

ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

ஆஞ்சைனா (இதய வலி)

மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).

பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது,  மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது. கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை போன்றவையும் மாரடைப்பு ஏற்பட காரணம்.

யாருக்கு வரும்?

புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

நுரையீரல் நோய்கள்

‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு.  இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடு வயதினருக்கும் வருகிறது.

நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.

மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சு வலியை உண்டாக்கும்.

நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

மேலும்,  மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம்.

நெஞ்சு எரிச்சல்

தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழைய சல்லடை வலை போல ‘தொள தொள’ வென்று தொங்கிவிடும்.

விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும்.

அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லா மல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலை யிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலிக்கிறது.

பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.

மன அழுத்தம்

குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கை யில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

முன்னெச்சரிக்கை

நெஞ்சுவலி வருவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக, வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்க வேண்டும். சந்தேகம் ஏற்படில், மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் செய்துகொண்டு, காரணம் அறிந்து முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டால் நெஞ்சுவலி வருவதை தடுக்கலாம்.

முதலுதவி எப்படி செய்வது?

நெஞ்சுவலி, மாரடைப்பு, இதயவலி போன்றவற்றிக்கான  அறிகுறிகள் தெரியவந்தால், உடனடியாக ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது நல்லது.  சரியாக கூற வேண்டுமென்றால், ஆஸ்பிரின்  325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது உடனே  தடுக்கப்படும்.

இதன் காரணமாக வலியின் தீவிரம் குறையும். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று தேவையான சிகிச்சை பெற்றால் ஆபத்தை தவிர்க்கலாம்.

நெஞ்சுவலியை தடுப்பது எப்படி? 

உயரத்துக்கு ஏற்க உடல் எடையை பராமரிக்கப்பட வேண்டும்.

முறையான உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் போன்றவை செய்வது உடலில் ரத்தம் ஓட்டம் சீராக செல்ல ஏதுவாகும்.

பிரஷர் உள்ளவர்கள், சுகர், கொலஸ்ட்ரால் போன்றவை உள்ளவர்கள் அதற்கான முறையான சிகிச்சை எடுத்து, அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு முறைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

புகைபிடிப்பது, பான் மசாலா போடுவது,  மது அருந்துவதை தவிர்ப்பது நலம்.

மேலும் பசிக்கு ஏற்ப உணவு உண்பது நல்லது. ஒரே நேரத்தில் அதிக உணவு உண்பதை தவிர்த்து,  சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.

தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் இன்ஸ்டன்ஸ் உணவுகளை தவிர்ப்பது நலம். மசாலா மிகுந்த, காரம் நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவோடு உண்பது நல்லது.

நெஞ்செரிச்சல் இருப்பவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது.  இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை  உயர்த்திக்கொள்வது நல்லது,

வலி நிவாரணி மாத்திரைகள் தேவையின்றி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும்  மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

அதேபோல தற்போது பெரும்பாலான நோய்களுக்கு உடனடி நிவாரணியாக வழங்கப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகளை தவிர்ப்பது நலம். இதன் காரணமாக  கிட்னி பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். குறைந்தது 6 மணி நேரமாவது ஆழ்ந்து உறங்குங்கள்.

மார்பு நெஞ்சு பகுதிகளில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தற்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறை,   பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, தனிமை, தேர்வு பயம், கோபம், குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற வற்றை தவிருங்கள்.

இதுபோன்ற காரணமாக  நெஞ்சு வலி ஏற்பட முக்கிய காரணங்கள்.

இன்றைய இயந்திரமான உலகில் மக்கள் தங்கள் உடலைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.  ஆகவே ஓவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி செய்வது அவசியம்.