சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதையடுத்து, வாக்கு பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்  முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஒன்றைரை லட்சம் பேர் ஈடுபட இருப்பதாகவும் தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள், தமிழகத்தில் உள்ள 18 மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 18-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பார்வையிட்டார்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 845 பேரும், 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில்  269 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில், ஆண்கள் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 பேர், பெண்கள். 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர். வாக்குப் பதிவுக்காக தமிழகம் முழுவதும்  67 ஆயிரத்து 720 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்குப் பதிவு மையங்களில் 15 ஆயிரத்து 302 வாக்கு பதிவு எந்திரங்களும், 89 ஆயிரத்து 160 வாக்குபதிவு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 94 ஆயிரத்து 653 ஒப்புகை சீட்டு எந்திரங்களும் வைக்கப்பட்ட உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் முழுவதும் வெப்காஸ்டிங் மூலம், நேரடியாக கண்காணிக்கப்படும் என்றும் தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், புதன்கிழமையன்று, அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்,  யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் விவிபேட் எந்திரத்தில், கட்சி சின்னம் மாறி வந்தால் உடனடியாக அங்குள்ள வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

வாக்கு எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை, வாக்காளர்கள், 1950 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் 14,400 பேர் உட்பட, ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 633 பேர் ஈடுபட உள்ளனர்.

இவர்களில் போலீசாரும், துணை ராணுவப் படையினரும் இப்போதே தங்களின் பணிகளை தொடங்கி விட்டதாகவும்  தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.