டில்லி:
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் மாசு கலக்கப்படுவது குறித்த விசாரணையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழகம் வரும் காவிரி நீரில் மாசு கலந்துவருவது உண்மைதான் என்று உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
காவிரியில் கர்நாடக திறந்து விடும் தண்ணீரில், கர்நாடக பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வரும் நீர், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி வருகிறது.
இதுகுறித்து, கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இன்று இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.
அதில், காவிரியில் கழிவுநீர் கலக்கப்படுவது உண்மைதான் எனவும், கழிவுகள் கலந்த காவிரி நீர்தான் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக மே மாதம் இறுதிவரை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக வரும் மே மாதம் இறுதி வரை ஆய்வு செய்து ஜூலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.