சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.22.09 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய 7ம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது.  மேலும் இ-பாஸ் நடைமுறையும் முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது.

 இதனிடையே, தளர்வுகளை அளித்தும் தேவையில்லாமல் வாகனங்களில்  சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, பொதுமுடக்க விதிகளை மீறி சுற்றித்திரிந்தவர்களிடம் இருந்து ரூ.22.09 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 6.99 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 10.03 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 9.05 லட்சம் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.