திருவனந்தபுரம்,

கேரள அரசு சமீபத்தில்  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணை பிறப்பித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து , முதல் தலித் அர்ச்சகர் யது கிருஷ்ணன் என்பவர் மணப்புரம் சிவன் கோயிலில் தனது பணியைத் தொடங்கினார்.

கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அங்கு பிராமணர்களே அர்ச்சகர்களாக உள்ளனர்.

தற்போது கேரள அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை வெளியிட் டதை தொடர்ந்து, பிராமணர் அல்லாத  36 பேர் அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் தலித் இனத்தை சேர்ந்தவர்கள்.  இவர்களை பணியில் அமர்த்த கேரள தேவசம் தேர்வு வாரியம்  சிபாரிசு செய்தது.

அதைத்தொடர்ந்து  திருவில்லா அருகே முள்ள மணப்புரம் சிவன் கோவிலில், அரசு ஆணைப்படி தலித் க யது கிருஷ்ணன் என்பவர் முதல் அர்ச்சகராக  தனது பணியை தொடங்கினார்.

முதல்நாள் தனது பணியை தொடங்கும் முன், தன்னுடைய குரு கே.கே.அனிருத்தன் தந்திரியிடம் ஆசி பெற்று,  தலைமை அர்ச்சகர் கோபகுமார் நம்பூதிரியுடன் அவர் கோவிலுக்குள் நுழைந்தார். கர்ப்பகிரகத்துக்கு சென்று மந்திரம் ஓதி, பணியை தொடங்கினார்.

யது கிருஷ்ணன்  திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் சமஸ்கிருதத்தை முதுநிலை பாடமாக எடுத்து படித்து வருகிறார். தற்போது இறுதியாண்டி படித்து வரும் நிலையில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு பணியை மேற்கொண்டுள்ளார்.

கேரளாவில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தி 81 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், யது கிருஷ்ணன் என தலித் இளைஞர் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சகராக பூஜை புனஸ்காரங்கள் செய்வதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன்மூலம், கேரளாவின் முதலாவது தலித் அர்ச்சகர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.