சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக அளிக்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கூடி அங்கிருந்து கோட்டை நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  அறிவித்திருந்தனர்.

ஆனால், போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியது. தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வரும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காவல்துறையினர்  அந்தந்த மாவட்ட பகுதிகளின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனைகள் மேற்கொண்டு தடுத்து நிறுத்தினர். மேலும் பேருந்து மற்றும் இதர வாகனங்களுக்கு சென்னைக்கு வரும் உரிமத்தையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர்.

இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேருந்துகள், ரெயில் கள் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை முதலே சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், , சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் காவல்துறையினர்  கடுமையான சோதனை மேற்கொண்டனர். அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என தெரிய வந்தால் அவர்களை கைது செய்து அருகில் உள்ள அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

ஆனாலும் இந்நடவடிக்கைகளை எல்லாம் மீறி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நேற்று காலை 7 மணி முதலே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி வருகை தந்த வண்ணம் இருந்தனர். அங்கும் தயாராக நின்றிருந்த காவல்துறையினர் முற்றுகை போராட்டத்துக்கு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை  கைது செய்து பேருந்து மற்றும் இதர வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு மேல், போராட்டம் தீவிரம் அடைந்தது. திருவல்லிக்கேணி பகுதியை சுற்றி இருந்த ஊழியர் சங்க கட்டிடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்தவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பெல்ஸ் சாலை, எல்லீஸ் சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலைய சாலைகள் வழியாக விருந்தினர் மாளிகை நோக்கி அணி அணியாக திரண்டனர்.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், கு.வெங்கடேசன், மு.அன்பரசு, கு.தியாகராஜன், ச.மோசஸ் உள்பட நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

அவர்கள் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது, நிலுவைத்தொகையை வழங்குதல் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர்  கைது செய்தனர்.

ஆனாலும் போராட்டம்  12 மணி வரை நீடித்தது. அதுவரை வாலாஜா சாலையில் போக்குவரத்து முடங்கியது. அந்த வழியாக பேருந்துகளில்  பயணம் செய்ய வேண்டியவர்கள் அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகே இறங்கி நடந்து சென்றனர்.

போராட்டம் காரணமாக நேற்று அண்ணாசாலை, சென்னை சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது. தலைமை செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து வழிகளும் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருந்தது.  தலைமை செயலகமும் முள்வேலி தடுப்புகள் அமைத்து தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதனால் முற்றுகை போராட்டத்தை அரசு முறியடித்தது.

இறுதியாக  1,700 பெண்கள் உள்பட 7,600 அரசு ஊழியர்களை  கைது செய்ததாக காவல்துறை அறிவித்தது.

இறுதியில் தற்காலிகமாக கோட்டை முற்றுகை போராட்டத்தை கைவிட்டதாகவும் தொடர்ந்து கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் வேறு வடிவங்களில் தொடரும் என்றும் சங்கங்கள் தெரிவித்துள்ளன.