சென்னை,

விஜய் டிவியில் தினசரி வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக கூறி, அதற்கு தடை விதிக்க கோரி  இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை வேப்பேரியில் உள்ள  மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது,

இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் உச்சகட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எவ்வித தொடர்பு இல்லாத ஏழுஆண்களும், ஏழு பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75 சதவீதம் நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்கட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சகிள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

தமிழர்கள் உயிரைவிட மேலாக மதித்து போற்றும் தமிழ்தாய் வார்த்தை கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.

இது 7 கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசனையும் அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமிதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜுலி, ஆர்த்தி, ரைசா, வையாபுரி, சினேகன்,கணேஷ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.