அயோத்தி: இராம பிரான்  பிறந்த இடமாக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, சுமார் 500 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு, இன்று  ராமர்கோவில் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் வெகுசிறப்பாக நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ராமர் கோவில் கட்டிடப்பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

சரியாக பகல் பகல், 12:45  மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ், உமாபாரதி உள்பட 170 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அயோத்தி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து,   அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி, குழந்தை ராமரை தரையில் விழுந்து வணங்கினார், தொடர்ந்து,  குழந்தை ராமர் கோயிலில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டார்.

ராமர்கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட  முக்கிய ஆச்சாரியார்கள்  மற்றும் சிலர் சமுக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

‘பூமி பூஜையின்போது , பூஜையை நடத்திய பூசாரி கூறும்போது, அடிக்கல் நாட்டு விழாவுக்காக இங்கு “ஒன்பது செங்கற்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன .  இவை 1989 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் இருந்து ராமர் பக்தர்களால் அனுப்பப்பட்டன. இதுபோன்ற 2 லட்சம் 75 ஆயிரம் செங்கற்கள் உள்ளன, அவற்றில் 100 செங்கற்கள் ‘ஜெய் ஸ்ரீ ராமின் வேலைப்பாடுடன் உள்ளது என்று தெரிவித்தார்.

இதுகுறித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் கூறுகையில், ராமர் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி முன்னிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்கியது. அங்கு அமைய உள்ள பிரமாண்ட கோவிலின் கருவறையில் 3 ஆண்டுக்குள் பக்தர்கள் வழிபட முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

கோவில் கட்டுமானப் பணிகளை கவனிக்கும் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா, அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கூறும்போது, “வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி எழுப்பப்படும்.

முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும். கருவறை, எண் கோண வடிவில் இருக்கும். வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி கோயில் கட்டப்படும்” என்றனர்.