சென்னை:

முதன்முதலாக  சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான  கோனா  (KONA) காரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்து, அதில் பயணம் செய்தார்.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மின்சார கார் தொழிற்சாலையை கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது, அங்கு மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட  நிலையில்,  வியாபார ரீதியில் இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

முதல்முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்  தயாரிக்கப்பட்டKONA எலெக்ட்ரி காரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமை செயலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன்  அதில் பயணமும் செய்தார்.  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கோனா மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை பயணம் செய்யலாம் என்றும், 100 கிமீ வேகத்தை 9.7 நிமிடங்களில் எட்டலாம் என்றும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

டிரைவரையும் சேர்த்து  5 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள  இந்த காரின்  விலை ரூ.30 லட்சம்.