சென்னை:

டியூரப்பாவுக்கு கர்நாடக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிதிகளுக்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கவர்னர், மாநில முதல்வராக எடியூரப்பாவுக்கு இன்று காலை பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

கர்நாடக மாநில ஆளுநர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் – பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது.

இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அதிமுக அரசை பாதுகாக்க பாஜக எடுத்து வரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.