சென்னை:

னியார் பால் நிறுவனங்கள் ரசாயன கலப்படம் செய்வதாகவும் அதனால் குழந்தைகளுக்கு புற்று நோய் வருவதாகவும் பொய்யான தகவலைத் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பால் முகவர் சங்கம் வலியுறுத்தி உள்ள்ளது.

இது குறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:

“தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன எனவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, *”தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என்று நிருபித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்”* என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  அதிரடியாக பேசினார்.

இந்த சூழ்நிலையில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும், பாலில் கலப்படம் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் -19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் கடந்த 05.08.2011 முதல்  31.05.2017 வரை தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை  எனவும் தெரிவித்திருக்கிறார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்களின் பதில் மனு உறுதி செய்துள்ளது.

அப்படியானால் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே நாங்கள் (பால் முகவர்கள்) மனிதாபிமானமிக்கவர்கள்  என்பதால் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்கள் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுகின்ற வகையில்  தனது அமைச்சர் பதவியை மட்டும் உடனடியாக ராஜினாமா செய்தால் போதும்  என்பதை “அன்போடு” தெரிவித்துக் கொள்வதோடு,

இனியாவது ஆதாரமற்ற தகவல்களை பொத்தாம் பொதுவாக பேசாமல் தனது பொறுப்பை உணர்ந்து பேசிட வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்”  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.