காரைக்குடி,

ன்று நாடு முழுவதும் மோடி அரசால் அமல்படுத்தியிருக்கும் புதிய வரி விதிப்பு முறை ஜிஎஸ்டியே அல்ல என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஒரே விதமான வரி முறை என்று சொல்லிவிட்டு பல விகிதங்களைக் கொண்டுள்ள வரி முறையே மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2005ம் ஆண்டு முதல் 2012 வரை ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடித்து வைக்கப்பட்டுவிட்டன. அப்போதே அரசியல் சாசன அவசர சட்டத்தையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிமுகம் செய்தது.

ஆனால்,  2006ம் ஆண்டு ஜிஎஸ்டி வரை  அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

அதிலும் குறிப்பாக குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் ஜிஎஸ்டிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இன்று அதே பாஐக, இன்று தனது சாதனை என்று பெருமை படுத்திக்கொள்கிறது.

ஜிஎஸ்டி வரி முறையின் முன்னோடி காங்கிரஸ் கட்சியும், ஐமுகூவும் தான்.

ஆனால் 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் பாஜக தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ஜிஎஸ்டி என்பது ஒரே வரியை விதிப்பது தான். இந்த வரி விகிதம் 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்றே வலியுறுத்தினோம்.

அதே போன்று பொருளாதார ஆலோசகர்களும் ஜிஎஸ்டி வரி 15 முதல் 15.5 சதவீதத்தை மீறக் கூடாது என்று கூறியிருந்தன.

ஆனால் பாஜக 18 சதவீத வரியை விதித்துள்ளது.

இது உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிகம். ஜிஎஸ்டி என்பது ஒரே வரி முறை என்று கூறி விட்டு 0%,5%,12%,18%,25%,40% என பல விகிதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆக ஏற்கனவே இருக்கும் வரியோடு கூடுதல் விகிதங்களாகவே இவை உள்ளன. அப்படி இருக்கும் போது இது எப்படி ஒரே வரியாக இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஜிஎஸ்டியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன, இதில் பல பொருட்கள் சேர்க்கப்படவில்லை. அவசர கதியில் இதை இப்போது அமல்படுத்தியது ஏன்.

இத்தனை ஆண்டுகள் பொருத்திருந்திருந்து விட்டோம், இன்னும் சில காலங்கள் பொருத்திருந்து சரியான ஏற்பாடுகளுடன் அமல்படுத்தியிருக்க வேண்டும்.

டெஸ்ட் ரன் செய்து விட்டதாக மத்திய அரசு கூறுகிறது,  நாடு முழுவதும் பல விதமான தொழில் முனைவோர், வணிகர்கள் இருக்கும் போது 5 பேரிடம் நடத்திய சோதனை எப்படி அனைவரின் பிரச்னைக்குமான தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.