டில்லி,

பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன்சாமி தொடர்ந்து தமிழக மக்களையும்,  திராவிட இயக்கங்களை வம்புக்கு இழுத்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு, கடும் எதிர்ப்பை சம்பாதித்த சாமி தற்போது திராவிடம் குறித்து சர்ச்சையான பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சுப்பிரணியன்சாமி இன்று டுவிட் செய்துள்ளதில்,

உலகளாவிய வரலாற்றில் மிகவும் கோழைத்தனமான & கொடூரமான தூண்டுதலின் அடிப்படையிலான அமைப்பு தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழர்களை பொறுக்கிஸ் என்று கூறி தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்ப்புக்கு ஆளானார்.

அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பல்வேறு சர்ச்சை கருத்துக்களை டுவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் கமல் குறித்து ‘முதுகெலும்பில்லாத மற்றும் ஆடம்பர முட்டாளான கமலை நான் எதிர்க்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு கமல்,  “கருத்து சொல்வதற்கான எலும்பு என்னிடம் உள்ளது. அதுபோதும். தமிழர்களை பொறுக்கிஸ் என்று அழைத்த அவரை நான் எதிர்க்கவில்லை. மக்கள் எதிர்ப்பார்கள்” என்று கூறி பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில்  தற்போது திராவிட இயக்கங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டு மீண்டும் கலகத்தை உருவாக்கி உள்ளார்.

சுப்பிரமணியசாமியின் இந்த சர்சைக்குரிய பதிவு குறித்து தமிழகத்தில் உள்ள திராவிட கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.