டெல்லி:

2020ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது   சிஏஏ சட்டத்தின் மூலம்  மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறி இருப்பதாக தெரிவித்தார்.

2021 -21ஆம் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது. 2 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்புரையாற்றினார். நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் சோனியாகாந்தி தலைமையில், மத்தியஅரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கையில் கறுப்பு பட்டை அணிந்தபடி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்  காங்கிரஸ் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ராம்நாத் கோவிந்த் பேசியதில் முக்கிய தகவல்கள்….

இந்த நாடாளுமன்றத்திலிருந்தும், இந்த சபையில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்து அவர்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கி, தேசிய நலன்களை மிக முக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று எங்கள் அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது.

பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மட்டுமே ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துகின்றன. அதே நேரத்தில், எதிர்ப்பு மற்றும் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் எந்தவொரு விதமான வன்முறையும் சமூகத்தையும், நாட்டையும் பலவீனப்படுத்துகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நமது அரசியலமைப் பானது இந்த நாடாளுமன்றத்திலிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும், தேவையையும் பூர்த்திசெய்து அவர்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கி, தேசிய நலனைப் பாதுகாப்பதை மிக முக்கியமாக வைத்திருக்கிறது.

இந்த அரசு ஏழை மக்களுக்காக அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து நாட்டு மக்கள் நடந்துகொண்ட செயல் பாராட்டுதலுக்குரியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பின் 370ஆவதுப் பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டது வரலாற்று ரீதியானது மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  அப்போது காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

குருநானக் 550ஆவது ஜயந்தியை முன்னிட்டு கர்தார்பூர் வழித்தடம் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக ஏற்படுத்தி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், ஹஜ் புனித யாத்திரை ஒதுக்கீட்டை சவூதி அரேபியா எந்த காரணமுமின்றி அதிகரித்தது. இதன் காரணமாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் இம்முறை ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டனர். ஹஜ் பயணத்தின் முழுச் செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறையில் செயல்படுத்திய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டாக அமைக்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த தசாப்தம் நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பல சீர்திருத்தங்களின் மூலம் உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக ரீதியாக இந்தியாவை முன்னேற்ற முடிந்தது.

அரசின் அனைத்து முயற்சிகளும்,  திட்டங்களும் சாதி, மத பேதமின்றி ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து திட்டங்களும் தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் முறையாகச் சென்று சேருகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்களுக்கான சந்தை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் தங்களின் செலவீனத் தொகையில் இருந்து 1.5 சதவீத லாபத்தை பெறத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

குற்றங்கள் குறைய அரசு சட்டங்கள் இயற்றி உள்ளது. சீட்டு மோசடியில் இருந்து மக்களை அரசு காப்பாற்றி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அது ஒரு சாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டது.

மத்திய அரசு ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.

மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பலனளிக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.