டில்லி:
ற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ்.ஏ பாப்டே என்று அழைக்கப்படும் சரத் அரவிந்த பாப்டே-ஐ (Sharad Arvind Bobde), மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் நவம்பர் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதி தேர்வுக்காண பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் உள்ள மூத்த நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில்,  தற்போதைய தலைமை நீதிபதி, மரபுப்படி, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுபவரின் பெயரை பரிந்துரை செய்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அடுத்த தலைமை நீதிபதியாக  எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்குமாறு  பரிந்துரை செய்துள்ளார்.  இந்த பரிந்துரை ஏற்கப்படும் என நம்பப்படுகிறது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் அடுத்த மாதம் அறிவிப்பார் என தெரிகிறது.

இதன் காரணமாக இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18ஆம் தேதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உள்ளது.

எஸ்.ஏ.பாப்டே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், ஏற்கனவே  மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.  தற்போது உச்சநீதி மன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ளார்.