ஓ.என்.ஜி.சி. என்ற பெயரைக் கேட்டாலே தமிழக மக்கள் அலறுகிறார்கள். தமிழக வளத்தை பாழாக்கும் நிறுவனம் என்றே ஓ.என்.ஜி.சிக்கு முத்திரை குத்திவிட்டார்கள் மக்கள். ஆனால் ஓ.என்.ஜி.சி. தனது பணிகளை விடுவதாக இல்லை.

அதுவும் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஆனாலும் தனது பணியை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது ஓ.என்.ஜி.சி.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அரியலூர், ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில் உள்ள 4050 வீடுகளுக்கு  கழிப்பறைகள் வசதி கட்டித்தரப்படும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 1350 கழிப்பறைகள் வீதம் கட்டப்படுமாம்.

இந்த திட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனம் ரூ.14.17 கோடி ஒதுக்கி உள்ளது. . இவை, ஸ்வச்சதா  திட்டத்தில் ஆறு மாதங்களில் கட்டப்படும்.

ஏற்கெனவே ஓ.என்.ஜி.சி. நிறுவனம்,  அசாம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட ரூ.55.99 கோடி செலவில் 16 ஆயிரம் கழிப்பறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.