சென்னை,

நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணம் குறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஏழைகள் ஏழைகளாகவே சாக வேண்டுமா? என கேள்வி விடுத்துள்ளார்.

ஏழைகள் எத்தனை தலைமுறை ஆனாலும் ஏழைகளாகவே வெந்து நொந்து சாக வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதா? என்று நடிகர் சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்தியஅரசின் வஞ்சகத்தாலும், மாநில அரசின் கையாலாகாததனத்தாலும் தமிழகத்தற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 1176 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், தனது கனவு படிப்பான டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி அனிதாவின் மரணம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகுமார்   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மகன் – ஒரு டாக்டர் மகள் – ஒரு பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை.

மூட்டை தூக்கும் தொழிலாளி மகள் 1176 – மதிப்பெண்கள் எடுப்பது இமாலய சாதனை.

பத்தாயிரத்தில் ஒரு ஏழைப் பெண்ணால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும். குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. உண்ண நல்ல உணவு கிடையாது. உடுத்த கவுரவமான உடை கிடையாது. படுக்க நல்ல பாய் கிடையாது. காடா விளக்கில் படித்து விடியும் முன்பும், இருட்டிய பின்பும் மட்டும்,இயற்கை உபாதையை கழிக்க செடி கொடி மறைவில் ஒதுங்கி வாழும், அனிதா போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெரும் படிப்பு படிக்கக் கூடாதா ?

டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ். கனவு காணக்கூடாதா?. ஏழைகள் எத்தனை தலைமுறை ஆனாலும் ஏழைகளாகவே வெந்து நொந்து சாக வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதா?

மாநில அரசின் கல்வித்திட்டத்தில் படிப்பவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவே இந்த நீட் தேர்வு.

சென்னையில் தனியார் பள்ளியில் லட்சங்கள் கல்விக் கட்டணமாகக் கட்டி படிக்கும் மாணவன் திறமையும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு என்றால் என்னவென்றே தெரியாமல் பின் 11-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன் திறமையும் ஒன்றாக இருக்குமா ?

ஒரே நாடு சரி. ஒரே மொழி, ஒரே மதம் இந்தியாவில் சாத்தியமா?. நாடு முழுவதிலும் பல்வேறு தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தயார் செய்யும் வரை நீட் தேர்வு இப்படி அப்பாவி அனிதாக்களை காவு வாங்குவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா ?

இவ்வாறு சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.