காசி

காசி என்னும் வாரணாசி நகரம் புராண காலத்தில் இருந்தே புகழ் பெற்றது. இந்த நகரில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

இதோ விடை:

ராமர், ராவணனை வதம் செய்தபின் சேதுவில் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க  சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சுயம்பு சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார்.

காசியில்  எங்கு பார்த்தாலும் லிங்கங்கள்.  இவற்றில் எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவல் தெய்வமாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். “ என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?”  என்று கூறித் தடுத்தார்.   பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி ”உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள்.

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் இனி ஒருக்காலும் ஒலி எழுப்பக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை