காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.27 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 22 அடியை தொட்டால், தண்ணீர் திறந்து விடும் நிலை ஏற்படும் என்பதால், சென்னை மக்கள் திக் திக் மனநிலையில் இருந்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மாவட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து காரணமாக அதிக அளவு நீர் நிறைந்து கடல் போல் ரம்மியமாக காணப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 480 கன அடி நீர்வரத்து வந்தது. ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,898 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி,  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்   21.27 அடியாக உயர்ந்துள்ளது.

ஏரிக்கு வினாடிக்கு 480 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது ஏரிக்கு நீர்வரத்து 505 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 2,926 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

ஏரியின் மொத்த உயரம் 24 அடி.  நீர்மட்டம் 22 அடியை எட்டினால்,  மதகுகள் மூலம் தண்ணீர் திறந்துவிடப்படும் சூழல் ஏற்படும். ஏற்கனவே அடையாறு உள்பட பல நீர்நிலைகள் மழைநீரால் நிறைந்து, அடையாறிலும் முழுமையாக நீர் செல்வதால், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டால், கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பேரழிவு போல மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படும் நிலை உருவாகி விடும். இதனால் சென்னை மக்கள் திக் திக் மனநிலையிலேயே இருந்து வருகின்றனர்.

ஆனால், இன்று சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால்,   ஏரிக்கு வரும் நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது.  இதனால், பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றும்,  அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.