முன்னாள் விஞ்ஞானியும், தற்போது ICMR-ன் கீழுள்ள வெக்டர் கண்ட்ரோல் ரிசர்ச் சென்டரின் (VCRC) மூத்த துணை இயக்குனராகவும் உள்ள டாக்டர் மாரியப்பன் அவர்கள், இந்த கொரோனா தாக்குதல் தென் கிழக்கு ஆசிய நாடுகள், அதிலும் இந்தியாவில்,  குறிப்பாக தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதற்கு நமது மரபணு மற்றும் உணவு பழக்கங்கள் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

“ஆட் கொல்லி நோய்களோட போராடி வெற்றி பெற நாம்மோட உணவு பழக்கம் மிக முக்கிய காரணமா இருந்து வருது. நாம சாப்பாட்டில தினமும் எடுத்துக்கிற ரசத்தில சேக்கிற பொருட்களில், பூண்டு, மிளகு, பெருங்காயம் மற்றும் வெங்காயம் ஆகியவை முக்கியமானவை.

இது எல்லாமே நம்ம நுரையீரலை பாதுகாக்கிறதோட இவைகளில் இருக்கும் அன்ட்டி-ஆக்ஸிடன்ஸ் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருது. அதோட நம் நாட்டோட புவியியல் இருப்பிடமும் ஒரு முக்கிய பங்கு வகிக்குது. கடற்கரை பகுதிகளான நாகப்பட்டிணம், இராம நாதபுரம் போன்றவைளை விட மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை போன்ற பகுதிகளில் நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது கவனிக்கபட வேண்டிய ஒன்று” என்கிறார்.

மேலும் இவர், “தென்கிழக்கு ஆசிய மக்களுக்கு கொடிய வைரஸ்களை எதிர்கொள்ளும் ஆற்றல் மிகுந்த மரபணுக்கள் இயல்பாகவே அமைந்திருப்பது சிறப்பு. இதனாலேயே கொசு போன்ற ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளால் பரப்பப்படும் கொடிய Vector-borne நோய்களின் தாக்குதலை நாம் எளிதாக வெற்றி கொண்டு விடுகிறோம். ஆனால் இந்த வகை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஜீன்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவினரிடம் மிகவும் குறைவு. எனவே தான் அங்கே பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சார்ஸ் (SARS) போன்ற நோய்களின் தாக்கம் இங்கே குறைவாக இருந்ததற்கும் இந்த மரபணு அடிப்படை தான் காரணம்” என்கிறார் உறுதியாக.

நமது தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் பத்திரிக்கை குறிப்பு ஒன்று, ‘2003 ஏப்ரல் 9 வரை, சார்ஸ் (SARS) கேஸ் ஒன்று கூட இந்தியாவில் பதிவாகவில்லை. ஆனால் மற்ற நாடுகளில் இவை அதிக அளவில் பதிவாகியுள்ளன. இப்போது பரவி வரும் கொரோனாவும் இதே சார்ஸ் கோவி-2 (SARS CoV-2) எனப்படும் வைரஸ் வகையை சேர்ந்தது’ என்று தெரிவிக்கிறது.

டாக்டர் மாரியப்பனின் கூற்றுப்படி நாம் இந்த கொரோனா மற்றும் மழைகாலத்தில் வரவிருக்கும் நோயான டெங்கு இவற்றை எதிர்கொள்ள தயாராகவே இருக்க வேண்டியதாகிறது.

“இனி வரும் காலங்களில் நாம் இந்த டெங்கு மற்றும் கொரோனா இரண்டினையும் ஒரே நேரத்தில் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொரோனாவை போலவே டெங்கு வுக்கும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஏற்கனவே மழை தொடங்கிவிட்ட சூழ்நிலையில் டெங்கு பரவலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். இவைகளை எதிர்த்து போராடி வெற்றி கொள்வதற்கான சுகாதார மற்றும் பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கிறது” என்று எச்சரிக்கை செய்கிறார் டாக்டர் மாரியப்பன்.

வருமுன் காப்போம்…. வாருங்கள்…. நமது வலிமையான மரபணுக்கள் துணையுடன்.

– லெட்சுமி பிரியா