டில்லி:

1100 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு  உச்சநீதிமன்றம் தடை விதித்தன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த 1100 மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து அது தொடர்பாக முறையான அறிவிப்பை வெளியிடாமல், சாலைகளின்  பெயர் மாற்றம் செய்யாமல் செயல்பட்டு வந்த  மதுபானக் கடைகளை உடனே மூட சென்னை உயர்நீதி மன்றம் கடந்த ஏப்ரல்  மாதம் 28ந்தேதி தீர்ப்பு கூறியது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1100 மதுக்கடைகள் உடடினயாக மூடப்பட்டது.

இந்நிலையில் அதை எதிர்த்து கடந்த  1ந்தேதி தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு கூறியிருந்தது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து, மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு தடை விதித்தும், மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் மூடப்பட்ட 1100 மதுக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.