சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி கடிதம் எழுதிய நிலையில், இன்று தொலைபேசியிலும் பிரதமருடன் பேசியிருந்தார்.  இதையடுத்து,  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தமிழ்நாட்டிற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன் முதல் 419 மெட்ரிக் டன் வரை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழக முதல்வராக பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், உடனே ஆக்சிஜன் ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில்,

தமிழகத்துக்கு தற்போது நாள்தோறும் 440 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அடுத்த இரு வாரங்களில் இந்த தேவை 840 டன்னாக உயரலாம். ஆனால் தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழகத்திற்கு 220 டன் ஆக்சிஜனை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. தமிழக அரசு உயரதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 476 டன் ஆக்சிஜனை ஒதுக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான ஆணை பிறப்பிக்கப்படாமல் உள்ளது. ஸ்ரீபெரும்புதுாரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில், அடுத்த இரு தினங்களுக்கு 20 டன்னும், ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் இருந்து 120 டன் ஆக்சிஜனும் தமிழகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

மேலும், இன்று மு.க.ஸ்டாலி, பிரதமர் மோடியிடமும் ஆக்சிஜன் ஒதுக்க வலியுறுத்தும்படி தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். அதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,  மாண்புமிகு PMOIndia அவர்களிடம் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் COVID19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கி ஒன்றிய அரசின் ஒத்துழைப்பைக் கோரினேன். தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தான கோரிக்கையைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தமிழ்நாட்டிற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன் முதல் 419 மெட்ரிக் டன் வரை அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது. ஸ்டாலினின் முதல் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்று, தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கி உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, நேஷனல் ஆக்சிஜன் நிறுவனம் ஈரோட்டில் இருந்த 38 மெட்ரிக் டன்னும், சேலம் ஜேஎஸ்டபிள்யு நிறுவனத்தில் இருந்து 15 மெட்ரிக் டன்னும், தஞ்சாவூர் சிக்ஜிலிச்ல் நிறுவனத்தில் இருந்து 40 மெட்ரிக் டன்னும், ஐநாக்ஸ் ஸ்ரீபெரும்புதூர் நிறுவனத்தில் இருந்து 140 மெட்ரிக் டன்னும், லின்டே கோபெய்ன் நிறுவனத்தில் இருந்து 60மெட்ரிக் டன்னும், நேஷனல் ஆக்சிஜன் நிறுவனத்தில் இருந்ந்து 30 டன்னும், ஐநாக்ஸ் புதுச்சேரியில் இருந்து44 டன்னும் சிறுதொழில் நிறுவனமான ஏஎஸ்யு நிறுவனத்தில் இருந்து 53 டன் உள்பட மொத்த 419 டன் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.,