ஆரணி: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்!
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி அடுத்த படவேடு அருகே உள்ள தேவனாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகள் தீபிகா. இவர் படவேடு அருகில் உள்ள ரேணுகொண்டாபுரத்தில் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சக மாணவிகளுடன் நேற்று சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார் தீபிகா. அப்போது படவேடு கமண்டலநதி அருகில் சென்று கொண்டிருந்த போது, படவேடு மங்ளாபுரம் கிராமத்தை சேர்ந்த பசுபதி என்பவர், தீபிகாவை கத்தியால் முதுகில் குத்தியிருக்கிறார். இதைக்கண்டு உடன் வந்த மாணவிகள் பயந்து ஓடினார்கள்.
அந்தப் பக்கம் இருந்த பொதுமக்கள், படுகாயம் அடைந்த தீபிகாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பசுபதியை பிடித்து சந்தவாசல் காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர்.
காவல்துறை விசாரணையில் பசுபதி, தீபிகாவை கடந்த ஒரு மாத காலமாக தினமும் பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்திருக்கிறார். . இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற தீபிகாவை மடக்கி தன்னை காதலிக்க வேண்டும், இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். தீபிகா மறுத்திருக்கிறார். உடனே பசுபதி, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர் முதுகில் குத்திவிட்டார்.
காவல்துறையினர் பசுபதியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காதலிக்க மறுத்த காரணத்தால் பள்ளி மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது