நியூயார்க்: உலகின் பணக்கார நாடுகள், பெரும்பாலான கொரோனா தடுப்பூசி மருந்துகளை எடுத்துக்கொண்டதால், ஏழை நாடுகளில், பெரியளவிலான கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் குற்றம் சாட்டியிருக்கிறார்.

உலகளவில் பருவநிலை மாற்றம் தொடர்பான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்த கிரெட்டா தன்பெர்க், தனது அறக்கட்டளையிலிருந்து 1 லட்சம் யூரோக்களை(1,20,000 டாலர்), உலக சுகாதார நிறுவன அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். இந்தத் தொகை ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வாங்க உதவிசெய்யும் என தெரிவித்துள்ளார்.

கிரேட்டா கூறியதாவது, “பணக்கார நாடுகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிடையே நிலவும் தடுப்பூசி ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள், தடுப்பூசி உருவாக்குபவர்கள் மற்றும் உலக மக்கள் முன்வர வேண்டும். உலகில் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளோர் தடுப்பூசி இல்லாமல் தவிக்கும் நிலையில், பணக்கார நாடுகள் இப்போது இளைஞர்களுக்கும் ஆரோக்கியமானவர்களுக்கும் தடுப்பூசி போட்டு வருவது முற்றிலும் தவறானது.

அதிக வருமானம் கொண்ட நாடுகளில், 4 பேரில் ஒருவர் இதுவரை தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதேநேரத்தில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், 500ல் ஒருவர் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். எனவே, சர்வதேச சமூகம், அரசாங்கங்கள் மற்றும் தடுப்பூசி உருவாக்குபவர்கள், இந்த தடுப்பூசி ஏற்றத்தாழ்வு பிரச்சினையை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்றுள்ளார் அவர்.