டெல்லி:

குழந்தைகள் கடத்தல் புகார் தொடர்பாக நித்யானந்தாவை குஜராத் காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவ்ர  வெளிநாடு சென்றதற்கான தகவல் ஏதும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது.

தங்களது இரண்டு குழந்தைகளையும் நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டதாக ஷர்மா என்பவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து,  குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டனர். அங்கு இரண்டு நித்தியானந்தா சீடர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நித்யானந்தா மீதும், குழந்தைகள் கடத்தல், சித்ரவதை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக தகவல் பரவியது. ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்தாலும், தேவைப்பட்டால் அவரை  கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குஜராத் போலீசார் மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நித்யானந்தா இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றதற்கான காவல்துறை அல்லது உள்துறை அமைச்சகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று வெளியுறவுத் துறை செயலர் ரவிஷ்குமார் தெரிவித்துள்ளார்.