சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில், ஆன்லைன் மூலம் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் மூலமாக பொறியியல்  கலந்தாய்வுக்கும்  தடையில்லை  என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை  நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  இன்றைய விசாரணையின்போது ஆஜரான அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர், மாணவர்களின் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக ஏற்க மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  நாளை முதல் மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்ப கட்டணத்தை டி.டி மூலமாகவும் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை ஆன்லைன் முறை உறுதி செய்யும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம்,  ஆன்லைன் மூலம் மட்டும் பொறியியல் கலந்தாய்வு என்ற முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மாவட்டம்தோறும் மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க உதவி மையங்கள் உள்ளதையும், டிடி மூலமாக விண்ணப்ப கட்டணம் ஏற்கப்படும் என்பதையும் பத்திரிக்கை, ஊடகங்களில் விளம்பரப்படுத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான விவரங்களை ஜூன் 8-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டனர்.