பெங்களூரு,:  கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

காவிரி வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, உச்சநீதிமன்ற  உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“தமிழகத்துக்கு தண்ணீர்விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை.  உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி நான் வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசிப்பேன். முழு விவரமும் தெரிய வந்தபிறகு, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.

கர்நாடக நீர்வளத்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் செய்தியாளர்களிடம், “காவிரி படுகையில் உள்ள 4 அணைகளிலும் தண்ணீர் இருப்பு மிக குறைவாக உள்ளது. ஆகவே (தமிழகத்துக்கு) தண்ணீரை திறந்து விடும் நிலையில் கர்நாடகம் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் அளவு, நகரங்களின் குடிநீர் தேவையை சந்திப்பதற்கும், சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர்களுக்கும்கூட போதுமானதாக இல்லை.

காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளிலும் 9 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.

எங்கள் அணைகளில் மிகக் குறைவான தண்ணீர்தான் உள்ளது என்கிற விவரத்தை எங்கள் சட்டக்குழுவினர் மூலம் உச்சநீதிமன்றத்தில்  தெரிவிப்போம். புது தண்ணீரை திறந்து விடும் பருவம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்து விட்டது” என்று தெரிவித்தார்.