கடலூர்:

விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணம் வயது முதிர்வு மற்றும் உடல் உபாதை தான் என்று அமைச்சர் சம்பத் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்புக்குறித்து அரசுக்குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பங்கேற்ற அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக சொல்லப்படுவது உண்மை அல்ல. விவசாயிகள் உயிரிழப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தவறாக பிரசாரம் செய்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக நம்புகிறோம். விவசாயிகள் அனைவரும் தன்னம்பிக்கை மிக்கவர்கள். ஒரு ஆண்டு பொய்த்தாலும் அடுத்த ஆண்டு விளைந்து விடும் என்ற தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் உயிரிழப்பு என்பது பொய்யான, தவறான தகவல். சிலர் வயது முதிர்வின் காரணமாக, இயற்கை காரணமாக, பல்வேறு நோய் உடல் உபாதைகளினால் இறந்திருக்கலாம் என்றார். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.