சென்னை:
மிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,  வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் பொதுமக்கள் பகலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 – யை கடந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் தீவிரமாகி, மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இன்றும், வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது.  திருத்தணியில் 110.84 டிகிரி, வேலூர் 108.32 டிகிரி, மீனம்பாக்கம் 106.16 டிகிரி, ஈரோடு 104.72 டிகிரி, திருப்பூர் 104.36 டிகிரி மற்றும் காஞ்சிபுரம் 104.36 டிகிரி என வெப்பநிலை பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது .  சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும், அதிகபட்ச வெப்ப நிலையானது 40 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸில் ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கரூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது 40 ல் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை எட்டும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டத்தில் ஏழு செ.மீ மழையும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.