மும்பை: தனக்கு சவுரவ் கங்குலி அளித்த ஆதரவைப் போன்று, தோனியோ, கோலியோ அளிக்கவில்லை என்று வெளிப்படையாக தனது மன ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார் இந்தியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ்சிங்.

பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, “நான் சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி மற்றும் விராத்கோலி ஆகியோரின் கேப்டன்சியில் ஆடியுள்ளேன். கங்குலி மற்றும் தோனி ஆகியோருக்கிடையே, சிறந்த கேப்டன் யார்? என்று முடிவு செய்வது கடினம்.

கங்குலி எனக்கு எப்போதும் அதிக ஆதரவை அளித்தார். அவரின் கீழ் ஆடிய நினைவுகள்தான் எனக்கு அதிகம். அவர் அளித்த ஆதரவுதான் அதற்கு காரணம். ஆனால், அத்தகைய ஆதரவை தோனியோ, கோலியோ எனக்கு அளிக்கவில்லை” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

கடந்த 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை மற்றும் 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணி கோப்பை வெல்ல உதவினார் யுவ்ராஜ்சிங். கடந்த 2019ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். தற்போது உள்ளூர் அளவிலான டி-20 தொடர்களில் விளையாடி வருகிறார் யுவ்ராஜ்சிங்.