ஐதராபாத்
காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க மூன்றாவது அணி ஒன்று தேவைப்படுகிறது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடியைக் குறித்து தவறான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது பாஜகவினர் குற்றம் சாட்டினர். அதற்கு அவர் அது திரிக்கப்பட்ட செய்தி என பதில் அளித்தார். மேலும் பிரதமர் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர் இல்லை எனவும் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
அந்த சந்திப்பில் சந்திர சேகர் ராவ், “நான் ஏற்கனவே எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளேன். தற்போதுள்ள நிலையில் நாட்டுக்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிதான் இது வரை மத்தியில் நடந்துள்ளது. அதனால் இது வரை என்ன நன்மை ஏற்பட்டுள்ளது? இவர்கள் இருவருக்கும் மாற்றாக ஒரு மூன்றாவது அணி அமைக்கப்பட வேண்டும். இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க ஒரு மூன்றாவது அணி அவசியத் தேவை ஆகும்.
இதுவரை காங்கிரஸ் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு நன்மையும் செய்யவில்லை. தற்போது ஆளும் பாஜகவும் அவ்வாறே நடந்துக் கொள்கிறது. மாநில பிரச்னைகள் குறித்துப் பேச நான் பலமுறை பிரதமரிடம் நேரம் கேட்டேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.
முன்பு மொரார்ஜி தேசாய், விபி சிங், தேவேகவுடா ஆகியோரின் சிறப்பான ஆட்சிய யாரும் மறாக்க முடியாது. அது போல ஒரு சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு அணியே தர முடியும். மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் மாறுதலை எதிர்பார்க்கின்றனர்.” எனக் கூறினார்.
வட மாநிலங்களில் வெற்றியை குவித்து வரும் பாஜகவுக்கு தென் மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி இருப்பது கட்சியினர் இடையே கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.