சென்னை:

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “என்னுடைய பேரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் பெறவே நடிகர் ரஜிகாந்தை மகன் மற்றும் மருமகளோடு சந்தித்தேன்” திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

நானும் ரவுடிதான்… நானும் ரவுடிதான்… என்று வடிவேலுவின் காமெடிப்போல, அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2 ஆண்டுகளாக கூறி வருகிறார்…நடிகர்  ரஜினிகாந்த். அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி விட்டு, அமைதியாக படத்தில் நடிக்க சென்றுவிடுவார்…

சமீபத்தில், தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர், சந்திப்பில் திருப்தியில்லை என்று கூறிவிட்டு சென்றார்.. இதனால் அவரது அரசியல் பிரவேசம்… மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக உள்ளது.

ரஜினியை பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  ரஜினியின் நண்பரும் காங்கிரஸ் எம்பியுமான  திருநாவுக்கரசர் ரஜினியின் போயஸ்தோட்ட இல்லத்துக்கு வந்து சந்தித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுகவுடன் கருத்துவேறுபாடு உடன் உள்ள காங்கிரஸ் கட்சி, ரஜினியுடன்  கூட்டணி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

ஆனால், ரஜினியை சந்தித்துவிட்டுதிரும்பிய திருநாவுக்கரசர் செய்தியாளரிடம் பேசும்போது,  என் பேரனின் பிறந்தநாள் சம்பந்தமாகப் பேசவே வந்தேன் என்று கூறி சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்ந்து கூறியவர்,  ரஜினியுடன் நடப்பு கால அரசியல் குறித்து பேசியதாகவும்,  கட்சி ஆரம்பிக்கவுள்ள ரஜினிக்கு யாரிடமும் ஆலோசனை பெறவேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

ஜிகே வாசனுக்கு  அதிமுக ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, மூப்பனார் நான் மதிக்கும் தலைவர். அதனால் அவர் மகன் வாசனுக்கு சீட் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

நேற்று ரஜினியை  இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்து பேசியது  குறிப்பிடத்தக்கது.