சென்னை:

திருப்பதியைப் போன்றே மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் சென்னையில் கட்ட திட்டம் உள்ளதாக திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்து உள்ளார்.

உலகிலேயே பணக்காரச்சாமியாக திகழ்ந்து வருபவர் திருப்பதி ஏழுமலையான்.  அவரை தரிசிக்க நாடு முழுவதும் தினசரி லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையிலும் திருப்பதியைப் போல பிரமாண்டமான, விசாலமான ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் விரும்புவதாக அதன் தலைவர் ஒய்.வி.ரெட்டி கூறி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரெட்டி, சென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர். அதனால் சென்னையில் பெரிய ஏழுமலையான் கோயில் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி யிடம் கலந்தாலோசித்த பிறகு விரைவில் அதற்கான நடவடிக்கையில் இறங்குவோம் என்றார்.

மேலும், ஏற்கனவே கன்னியாக்குமரியில் ஏழுமலையான் கோயில் கட்டி இருந்தாலும் சென்னை யில் பெரிய மற்றும் விசாலமான கோயிலை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.  இதற்கான இடம் தேவைப்படும் பட்சத்தில் ஆந்திர முதலமைச்சர் தமிழக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்’ என்று கூறினார்.

இதுகுறித்து கூறிய, சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தின் தலைவர் கிருஷ்ணா ராவ் , கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு சென்னையில் இடம் தருவதாக உறுதியளித்தார். ஆனால், அது நடக்கவில்லை. தற்போது நாங்கள் மீண்டும் இடத்திற்காக காத்திருக்கிறோம்’ என்று கூறினார்.

ஆக சென்னை மக்கள் விரைவில் ஏழுமலையானே இங்கேயே தரிசிக்கலாம்…