ஐதராபாத்:

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன்  விழா நிறைவுபெற்றது. இன்று மாலை கொடி இறக்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புரட்டாசி பிரமோற்சவம்,  கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் காரணமாக, மலையப்பசவாமி 4 மாட வீதியில் தினசரி காலை மாலை ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் வழங்கினார்.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகர்வான, கடந்த 4ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியில் லட்சக்கணக் கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இறுதிநாளான நேற்று காலை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து இரவு கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.

இந்த நிலையில் விழாவின் நிறைவு நாளான இன்று காலை கோவிலில் இருந்து உற்சவ மூர்த்தி களும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டனர்.

அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து ஏழுமலையான் கோவில் தெப்பக் குளத்தில் (புஷ்கரணி)  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடை பெற்றது.  சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தெப்பக் குளத்தில் புனித நீராடினர்.

இதையடுத்து,  இரவு 7 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.