சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று,  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு திடீர் விசிட் செய்த மாவட்ட கலெக்டர், அங்கு வாக்குகள்  எண்ணி முடிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை உடனே அறிவிக்க உத்தரவிட்டார்.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து திமுக போராட்டத்தில் குதித்து உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர்  கந்தசாமி திடீரென வாக்கு எண்ணும் மையத்துக்கு விசிட் செய்து, அங்குள்ள தேர்தல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். ஏன் இன்னும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவில்லை என்று கடுமை காட்டிய கலெக்டர் உடனே முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முதலில் ஒரு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.