திருவாரூர்:
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.
கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வரும் 28ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டது.
ஆனால் கஜா புயல் பாதிப்பு காரணமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், பணிகள் முடிவடைந்த பின் தேர்தலை நடத்தலாம் என்றும் அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. மேலும் இது தொடர்பாக உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையரிடம் அறிக்கை கேட்டடிருந்தது. அதைத்தொடர்ந்து சனிக்கிழமை தேர்தல் அலுவலரான திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அரசியல் கட்சிகள் சார்பில், நாடாளுமன்ற தேர்தலுடன் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கஜா புயல் பாதிப்பு காரணமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், பணிகள் முடிவடைந்த பின் தேர்தலை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையாளரான மாவட்ட கலெக்டர் அறிக்கை தமிழக தேர்தல் ஆணையாளர் சாஹுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த சாஹு அதை ஆராய்ந்து, தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்.
இதற்கிடையில் இன்று டி.ராஜா தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.