பெங்களூரு:
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனுக்கு  ஜாமீன் கிடைத்துள்ளது.
தமிழகத்தை உலுக்கிய பிரபல திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகை கடையில் கடந்த ஆண்டு (2019) அக்டோபரில் நடைபெற்ற திருட்டு வழக்கில், முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன்  பெங்களூரூ நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அதையடுத்து அவர், பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டாா்.
முருகன் ஏற்கனவெ எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவிய நிலையில், சமீபத்தில் பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, முருகன் ஜாமின் கோரி திருச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இநத் மனுமீதான விசாரண  திருச்சி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, திருச்சி கொள்ளை தொடர்பாக காவல்துறையினர் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து கொள்ளையன்  திருவாரூர் முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி காா்த்திக் ஆசாத் உத்தரவிட்டாா்.
முருகனுக்கு திருச்சி நடைக்கடை கொள்ளை வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே சமயபுரம்   வங்கியில் நடைபெற்ற திருட்டு வழக்கு, பாலக்கரையில் திருட்டு வழக்கு உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.