டோக்கியோ:

யோசிகா சினோகரா (வயது 82). இந்த பெண் தனது 6வது வயதில் தந்தையை பறிகொடுத்தார். 20வது வயதில் கணவரை விவாகரத்து செய்தார். கல்லூரி பட்டம் கூட பெறாத இவர் தான் தற்போது ஜப்பான் நாட்டில் சுய தொழில் புரிந்து முன்னேற்றமடைந்த முதலாவது பெண் பில்லியனராக போர்ப்ஸ் பத்திரிக்கையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1973ம் ஆண்டு டோக்கியோவில் ஒரு பெட்ரூபம் பிளாட்டில் ‘‘டெம்ப் ஸ்டாஃப்’’ என்ற தனியார் வேலை வாய்ப்பு முகமையை தொடங்கினார். இவர் கூறுகையில்,‘‘ இது ஆணாதிக்க சமுதாயம். பணியாற்றும் இடங்களில் பெண்கள் உதவியாளாக மட்டுமே கருதப்படுகிறார்கள். அதனால் சில வாய்ப்புகள் மட்டுமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது. எங்கு பெண்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘‘டெம்ப்ஸ்டாஃப்’’ என்ற நிறுவனத்தை தொடங்கினேன் என்றார்.

தற்போது இவரது நிறுவனத்திற்கு 313 அலுவலகங்கள் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் தைவான் வரை அலுவலகங்கள் உள்ளது என்று போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. இவரது கடந்தாண்டு வருவாய் 4.5 பில்லியன் டாலர். சமீபத்தில் இந்த நிறுவன பங்குகள் 12 சதவீத லாபத்தை கண்டன. இதன் மூலம் அவர் தற்போது உச்சத்திற்கு வந்துள்ளார்.

இவர் ஒரு முறை பேட்டியின் போது கூறுகையில்,‘‘ திருமணம் முடிந்த சில காலத்திலேயே நான் திருமணம் செய்திருக்க கூடாது என்பதை உணர்ந்தேன். எனக்கு அமைந்த கணவர் சரியான பொருத்தம் கிடையாது. அதனால் அவரை எவ்வளவு சீக்கிரம் முடியும் அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். இந்த முடிவுக்கு எனது தாயும், சகோதரரும் என் மீது கோபப்பட்டனர். விவகாரத்திற்கு பிறகு எனக்காக ஏதாச்சும் நானே செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். அப்படி தொடங்கப்பட்டது தான் டெம்ப் ஸ்டாஃப் நிறுவனம்’’ என்றார்.

ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து நிரந்தர பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை கடந்த 10 ஆண்டுகளாக குறைத்து வருகின்றன. இதன் காரணமாக யோசிகா சினோகராவின் முன்னேற்றம் மேலோங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.