நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ப.கவிதாகுமார் “நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனை” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:

விஞர் வைரமுத்துவை விமர்சித்த நித்யானந்தா பீட பெண் துறவியின் வீடியோ பற்றிய விவாதம் இன்று பரபரப்பாக மாறியுள்ளது.

Ma Nithyananditha என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த 16 வயது பெண் பிளஸ் 2 படிப்பதாக வீடியோவில் கூறுகிறார். அவரை பேஸ்புக்கில் தொடர்வோரின் எண்ணிக்கை 8368.

நித்யானந்தா குருகுலத்தில் அவர் படிப்பதாகவும் தனக்கு பல்வேறு சக்திகள் இருப்பதாகவும் வெளியிட்டுள்ள 2 வீடியோக்களிலும் பேசியுள்ளார்.

ஒரு வீடியோவை இதுவரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம். மற்றொரு வீடியோவை இதுவரை 8 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அதில் இருக்கும் பின்னூட்டத்தில் ஸ்பெஷல் ‘ரிக்வெஸ்ட்டுகளும்” உண்டு.

நித்யானந்தா சங்கத்தின் இளவரசியாக இருப்பதாக கூறிய அந்தப் பெண், அவரை அப்படி அழைப்பதை விட குழந்தையென அழைப்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

கட்டுப்பெட்டியான பிராமின் குடும்பத்தில் பிறந்ததாகவும், சைவ முறையை கடைபிடிப்பதாகவும் கூறினார். அதனால் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை.

பேச்சின் ஊடே நாத்திகம் பேசுபவர்களை சபிக்க விரும்பவில்லையென்றும், இந்து சனாதன தர்மம் சொல்லிய கலாச்சாரத்தின்படி தாங்கள் நடப்பதாகவும், அதை விமர்சிப்பவர்களை இப்படியே விடக்கூடாது என்று கொம்பு சீவி விட்டார்.

அவருடைய பேச்சில் அடிக்கடி வெளிப்பட்டது இந்து சனாதனம் என்ற சொல்.

இந்து சனாதனம் பெண்களை எப்படி நடத்தியது என்பதை நாம் அறிவோம்.கணவனை இழந்த கைம்பெண்ணை மொட்டையடித்து வீட்டில் அமரவைக்க வேண்டும் என்று சொன்ன கேடு கெட்ட மனுஸ்மிரிதி, அவர்களால் மனுநீதி என கூறப்படுகிறது. .

இந்து பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மனுஸ்மிரிதி பட்டியலிட்டுள்ளது.. அதெல்லாம் இந்த வீடியோவில் பேசிய அந்த குழந்தைக்கு புரியும் வயது இல்லை.

” இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்” என சொன்னது இந்து சனாதன தர்மததிற்கு கையேடாக இருக்கும் மனுஸ்மிரிதி என்பது அந்த குழந்தைக்கு எங்கே தெரியப் போகிறது?

‘ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்” என்றும் அதே மனு தான் சொல்கிறது.

தன்னிடம் பல்வேறு சக்திகள் இருப்பதாக வீடியோவில் பேசிய குழந்தை,இந்து சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் மனுவை படித்ததா எனத் தெரியவில்லை.

வீடியோவில் பேசிய அந்தக் குழந்தைக்கு உடனடித் தேவை நல்ல மனநல மருத்துவரின் ஆலோசனை. அது முடிந்த பின்பு அவரிடம் படிக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அண்ணல் அம்பேத்கர் எழுதிய “இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நூல்.

நித்யானந்தா பீடத்திற்கு இந்த நூலை நூற்றுக்கணக்கான காப்பி அனுப்பி வைப்பது, பல பெண் குழந்தைகளை மூடத்தனத்திலிருந்து மீட்க உதவும்.

– ப.கவிதா குமார்

குறிப்பு: மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பதும் அந்த குழந்தை தான்.