சென்னை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், பாஜக – அதிமுக கூட்டணிக்கு எதிரான போர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் சேலத்தில் நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் தொடர்பான படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சிகளுடனான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் – சீலநாயக்கன்பட்டியில் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காதர் மொய்தீன் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

அதைத்தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் தொடர்பான படஙக்ரளை பகிர்ந்து ஸ்டாலின் இன்று டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

தமிழ் மண் – பண்பாடு – தனித்தன்மை மீது படையெடுக்கும் பாஜகவுக்கும், அதற்கு எல்லா வகையிலும் அடிமையாக துணை நிற்கும் அதிமுக கூட்டணிக்கும் எதிரான போர்தான் இத்தேர்தல். தமிழர்களின் அரசியல் தெளிவு மே 2 முடிவுகளில் தெரியும். திமுக கூட்டணி வெல்லும்; தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காக்கும்! என தெரிவித்துள்ளார்.