சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கடிதம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளது.

சட்டசபையில் மானிய கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களில்,  அரசின் ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதியைப் பெற பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

இன்றைய கூட்டத்துக்கு திமுக உள்பட எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் 13 பேர் உயிரிழந்தனர். இந்தப் பிரச்னையை பேரவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்ப முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து சபையில் விவாதம் நடத்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்க எம்.பி.சண்முகநாதன், தமீமுன் அன்சாரி, டிடிவி தினகரன் ஆகியோர் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கடிததம் சட்டப் பேரவை தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்க திமுக.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க சபாநாயகர் தனபாலிடம் திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடைபெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தலைமைச் செயலகத்தில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.