சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட 2 ஆண்டுகள், மிகவும் கடினமான காலகட்டம் என தெரிவித்துள்ளார் மகேந்திரசிங் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியைப் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள, ‘சிங்கத்தின் கர்ஜனை’ எனப் பெயரிடப்பட்டுள்ள டாகுமென்ட்டரி வீடியோ, சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.

அவர் கூறியுள்ளதாவது, “குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அவற்றில் பலவற்றை நம்மால் ஏற்க முடியாமல் போனாலும், உண்மை அதுதான்.

எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காதபோது, அதை ‘மேட்சி ஃபிக்சிங்’ என்று ரசிகர்கள் பேசத் தொடங்கி விடுகின்றனர். தடை செய்யப்பட்டிருந்த 2 ஆண்டுகள், என் வாழ்வின் மோசமான காலகட்டம்” என்று கூறியுள்ளார்.

இவர் தலைமையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மொத்தம் 3 தடவைகள், ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி