சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ.15 உடன்  விருப்பமனு வழங்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர்  இபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் மார்ச் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தேதிகளை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தலையொட்டி, திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி, தொகுதிப்பங்கீடு போன்றவை உறுதி செய்யப்படாத நிலையிலம,  அரசியல் கட்சிகள் ஏற்கனவே பிரசாரத்தில் தீவிரம் காட்டத்தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என்று அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமை கழகத்தில்

வருகின்ற 24.2.2021 புதன்கிழமை முதல் 5.3.2021 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விருப்பமான விண்ணப்ப படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மீண்டும் தலைமை கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்”

தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புகிறவர்கள் 15 ஆயிரம் ரூபாயும்,

புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் 5,000 ரூபாயும்

கேரளாவில் போட்டியிட விரும்புபவர்கள் 2,000 ரூபாயும்

கட்டணமாக செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.